Saturday, 7 September 2024

எல்லாம் கர்மாவின் படிதான் நடந்து

 எல்லாம் கர்மாவின் படிதான் நடந்து

ஒரு ஏழை நாய் ஒன்றை வளர்த்து வந்தாராம். பலருக்கும் ஏனோ அதை பிடிக்கவில்லை கல்லால் அடித்து துன்புறுத்தினர். அவருக்கு மட்டும் ஏனோ அதன்மேல் ஒரு பாசம்.ஒருமுறை அந்த வழியே தேரில் வந்த அந்நாட்டு தளபதி நாயை தேரில் ஏற்றி கொன்று விட்டார். ஏழைக்கு மனசு தாங்கவில்லை கதறிவட்டார். அந்த வழியாக வந்த சந்நியாசி ஒருவர் "எதற்கு அழுகிறாய்? எல்லாம் கர்மாவின் படிதான் நடந்து உள்ளது" என்றார். ஏழைக்கு கோவம் வந்து " என்ன நியாயம் இது பிறந்தது முதல் அனைவரிடமும் அடி வாங்கி கஷ்டப்பட்டு கடைசியில் துடிதுடித்து இறந்தும் விட்டது. எதற்கு இப்படி ஒரு பிறப்பு அதற்கு?". சந்யாசி பதில் சொல்லவில்லை.

 நாட்கள் சென்றன, ஒருமுறை இளவரசி நகர்வலம் வந்தாள். அவள் மிகவும் மோசம், மக்களை துன்புறுத்தி சந்தோஷப்படுபவள், யாரையும் மதிக்கமாட்டாள். இந்த ஏழையின் வீட்டு வாசலில் வரும்போது ரதம் சற்று குலுங்க, அவள் குடித்துக்கொண்டிருத்த பானம் சிதறியது. உடனே ரதத்தை ஓடிவந்த தளபதியை காலால் எட்டி உதைத்தாள். அவர் தடுமாறி அன்று நாயை கொன்ற அதே இடத்தில் விழ ஒரு கல் நெற்றியில் பட்டு அங்கேயே இறந்து போனார். உடனே இளவரசி "அவன் உடலை தூக்கி வீசுங்கள்" என்று கூறி திமிராக சென்றுவிட்டாள். 

அதே சந்நியாசி ஏழையிடம் வந்து "இப்பொழுது உனக்கு திருப்தியா?" என்று கேட்டார். அவர் புரியாமல் விழிக்க, "உன் நாயின் அடுத்த பிறவிதான் இந்த இளவரசி. முன் ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு நாயாக பிறந்து கஷ்டப்பட்டாள், இன்று அவளை துன்புறுத்திய இந்த மக்களையும், தளபதியையும், இளவரசியாக பிறந்து பழி வாங்குகிறாள்." " சரி சாமி அப்படி என்றால் இந்த பிறவியில் அவளால் சில நல்லவர்களும் கஷ்டப்படுகிறார்களே அது…" "வெறும் புண்ணியம் மட்டும் செய்தால் அவள் அடுத்த பிறவி எடுக்கவேண்டாமா?" என்றார்.

 "அப்படி ஏன் கடவுள் பாவம் செய்ய வைத்து அடுத்த அடுத்த பிறவி கொடுக்க வேண்டும்… பாவம் கழிந்ததும் முக்தி கொடுக்கலாமே?" "அதற்குத்தான் மனிதனுக்கு மட்டும் 6வது அறிவை கொடுத்தான். புண்ணியத்தை பலனை அனுபவிக்கும்போது ஆடாமல், யாரையும் அதிகாரத்தை கொண்டு இம்சிக்காமல், சிந்தித்து நல்ல முறையில் நடப்பவர்களை அவன் திருப்பி இந்த பூமிக்கு அனுப்புவது கிடையாது அவனிடமே வைத்து கொள்கிறான்.."என்றார் . " எனக்கு மட்டும் ஏன் அவள் நாயாக பிறந்த போது அவளிடம் பாசம் இருந்தது?" சந்நியாசி சிரித்தபடி சொன்னார் "அவள் முதல் பிறவியில் ஊரை கொள்ளை அடித்து சொத்து சேர்த்ததே அவள் மகனாக பிறந்த உனக்காகத்தானே"….


No comments:

Post a Comment