Wednesday, 5 March 2025

உடல் என்பது ஆலையமே

 உடல் என்பது ஆலையமே! பேசாலைதாஸ்


உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..! 

ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..!

ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்!

உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும்

பிடி சாம்பலாகி விடும்..!

புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்....அது உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்...!

ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்றாய்..!

ஆனால் உனக்கு காவல் தெய்வமாக, உன் உயிருக்கு காக்கும் கடவுளாக,

இருப்பது உன் உடலே...!

அக குடும்பத்தை மறந்து விடாதே. உன் அக குடும்பம் உன் உடலே..!

உன் அக குடும்பம் சரியில்லை என்றால்

சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..!

உன் உள் குடும்பம் உன் உடலே!

அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும்

உன்னை காக்கவும் யாரால் முடியும்..!

மற்ற உயிர்களுக்கு ஒருவன் செய்யும் பாவத்திற்கு

விமோசனம் உண்டு..!

ஒருவன் அவன் உடலுக்கே செய்யும் பாவத்திற்கு

விமோசனம் இல்லை...!

காரணம் அந்த உடல் அவன் உயிருக்காகவே

சிறப்பு மிக்க வரமாக கொடுக்கப்பட்டதால்..!

உடலுக்கு ஒருவன் செய்யும் தொண்டே  பூஜை..!

உடலுக்கு உள் சென்று உனக்காக உழைக்கும்

உறுப்புகளை வணங்குவதே ஆலயம் சென்று

வணங்குவதை விட உயர்வானது..!

உடல் அனுமதித்தால் தான் ஒருவன் சித்தனும் ஆக முடியும்..!

ஒருவன் எப்படி பட்டவன் ஆக வேண்டும் என்று தீர்மானிப்பது அவனின் எண்ணங்களே..!

ஆனால் அந்த எண்ணங்களை தீர்மானிப்பது உடலே..!

ஒருவன் எதுவாக ஆக விரும்புகிறானோ

அதை தீர்மாணிப்பதும் உடலே...!

ஒருவன் உண்ணும் உணவும் பேணி காக்கும் உடலும் அழைத்து செல்லும் அதன் அதன் தன்மைக்கு ஏற்ப..!

ஒருவன் அவன் உள் குடும்பமான உடலை கவனித்தால்..!

அந்த உள் குடும்பமே உன் வெளி குடும்பத்தை காக்கும்..!

பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் குலத்தின் குலதெய்வம் அவரின் உடலே..!

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

தியானம் நம் மனதோடு பேச செய்யும்.

ஆசனம் நம் உடலோடு பேச செய்யும்.

அதை தேடு...!!

இந்த தத்துவத்தை திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் தெள்ளத்தெளிவாக சொல்லுகிறார்...

        "தன் உடலை காக்காதவன் புழுவாய் புழு புழுத்து இறப்பார்" என்று கூறியுள்ளார்...




செயலற்ற செயல்!

செயலற்ற செயல்!  பேசாலைதாஸ்


ஒரு சூஃபி ஞானி கடவுளை தேடி நாடுநாடாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அவர் பல குருமார்களை சந்தித்தார். ஆனால் எதுவும் அவருக்கு திருப்தியளிக்க வில்லை. இதயத்தை அர்ப்பணிக்க கூடிய இடத்தை

அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஏமாற்றத்தோடும் நிராசையோடும் அவர் வெளியே குருவை தேடுவதை நிறுத்தி விட்டு உள் குரலை கேட்பது என்று முடிவு செய்து, தனித்து இருப்பதற்காக காட்டுக்குச் சென்றார்.

அங்கு அவர் ஒரு மிக அழகான தேக்கு மரக் கூட்டத்தை கண்டார். பழமையான வயதான பல தேக்கு மரங்கள் ஒன்று கூடி ஒரு கூடாரம் போல உருவாகியிருந்தன. அதன் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இயற்கையின் மழை, காற்று, வெயில் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையில்

உருவாகியிருந்தது. அருகில் ஒரு ஏரி இருந்தது. அந்த கூடாரம் மிகவும் அமைதியானதாக,

காட்டின் நடுவில் யாரும் வராத இடத்தில் இருந்தது.

அந்த சூஃபி அதனுள் சென்றார்.

அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்தது. அதற்கே உரிதான அழகுடன் அந்த இடம் இருந்தது.

அவர் அங்கே உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். வாரத்திற்கு ஒருமுறை அவர்

அந்த இடத்தை விட்டு வெளியே வந்து பக்கத்து கிராமத்துக்குப் போய் கொஞ்சம் உணவு வாங்கி

சாப்பிட்டு விட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார்.

சூஃபிக்கள் கடவுளின் பெயரை அல்லா என்று திரும்ப திரும்ப உச்சரிப்பர்.

முகம்மதியர்களின் மந்திரமான இதன் பொருள், `கடவுள் என்று யாரும் இல்லை. ஆனால் கடவுள் உண்டு.` ஆனால் சூஃபிகள் இதை அல்லா என்ற ஒரே வார்த்தைக்குள் சுருக்கி

விட்டனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் திடீரென ஒருநாள் மந்திரத்தை உச்சரித்துக்

கொண்டிருக்கும் போதே இறந்து விடக்கூடும். அப்படி உச்சரித்துக் கொண்டிருக்கும்போதே

இறந்து விட்டால் பாதியில் கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும்போது இறக்க

நேரிட்டால் நீ ஒரு நாத்திகனாக இறந்து விடுவாய். கடைசி நிமிடத்தில் எல்லாமும்

குழம்பி விடும். எதிர்மறையாளனாகி விடுவாய். அதனால் அது ஆபத்தானது என்பதாகும்.

அதனால் அவர்கள் இந்த முகம்மதிய மந்திரத்தை அதன் முழுவதுமாக சொல்வதில்லை. வெறுமனே அல்லா

அல்லா எனக் கூறுவதோடு சரி. அல்லா எனக் கூறிக் கொண்டே இருந்தால் கடைசி நிமிடத்தில்

கூட அவர்கள் இதயம் நிரம்பி, அவர்கள் மூச்சுக் காற்றுக்கூட அல்லா எனக் கூறும்,

கடவுளின் நினைவாகவே இறப்பர். இந்த நிலையைத்தான் அவர்கள் ஜீக்குரா என்று

அழைக்கின்றனர்.

இந்த சூஃபி தன்னுடைய மந்திரமான

அல்லா, அல்லா என்பதை மாதக்கணக்கில் உச்சரித்துக் கொண்டேயிருந்தார். அவர் மிகவும்

அமைதியாகவும், சாந்தமானவராகவும், தன்மையானவராகவும், மாறுவதை அவர் உணர

ஆரம்பித்தார். அந்த கூடாரத்தை சுற்றி மிகவும் ஆழ்ந்த மௌனம் இருந்தது. அது மிகவும்

அமைதியானதாக இருந்தது. அவர் தனக்குள்ளும் அந்த மௌனத்தை உணர துவங்கினார். அவரது

இருப்பின்னுள்ளும் அந்த அமைதி பரவியது. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது

போதாது. முக்தி நிலை, ஞானமடைதல் அதற்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டும்.

வருடங்கள் கடந்தன. அந்த கூடாரம்

ஒரு தூய்மையான இடமாக மாறி விட்டது. தேக்கு மரங்கள் மிகவும் வளமடைந்தன. அவை புதிதாக

நிறைய கிளைகள் விட்டு, இலைகள் விட்டு செழிப்படைந்தன. அந்த கூடாரமே அழகால்

நிரம்பியிருந்தது. – ஆனால் அந்த சூஃபியின் இதயம்

மிகவும் வருத்தத்தில் இருந்தது. ஆனால் அவர் காத்துக் கொண்டேயிருந்தார்.

அவர் அவரால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்து விட்டார். அவர் தியானமும்

பிரார்த்தனையும் செய்து கொண்டேயிருந்தார். பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அவர் முக்தி நிலை பெறவேயில்லை. அவர் ஆழ்ந்த மௌனத்திலும் அமைதியிலும் இருந்தார். ஆனாலும் அவர் ஞான

நிலை கிட்ட வில்லை. இருந்தது கரைந்து விட்டது, ஆனால் எதுவும் அவருக்கு நிகழவில்லை.

இருந்தது போய் வெறுமையாகி விட்டது, வெறுமை ஒரு விதமான அமைதிதான், ஆனாலும் வெறுமை

வெறுமையாகவே இருந்தது. வேறு எதுவும் செய்ய வழியில்லை.

ஒரு நாள் நடு இரவில் திடீரென

அவருக்கு ஒரு ஐயம் எழுந்தது. ஒரு சந்தேகம் தோன்றியது. ஏனெனில் பதினெட்டு வருடங்கள்

என்பது மிகவும் அதிகமானது, அவர் மிகவும் முயற்சி செய்து பார்த்து விட்டார், அவர்

தனது முழு மனதோடு அதில் ஈடு பட்டு இருந்தார், அவர் எதையும் பிடித்து வைக்கவில்லை,

அப்படியும் அது நடக்கவில்லை என்றால் அது எப்போதுமே நடக்காது போல தோன்றுகிறது. ஒரு

சந்தேகம் எழுந்தது, அவர் சிந்தித்து பார்க்க ஆரம்பித்தார். இந்த தேக்கு மரக்

கூட்டம் எப்படி மழையையும், வெயிலையும் உள்ளே அனுமதிப்பதில்லையோ, அது போல எனது

பிரார்த்தனையையும் வெளியே போக அனுமதிப்பதில்லையோ? இதன்

கிளைகள் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் எனது பிரார்த்தனைகள் உள்ளேயே நின்று

விடுகின்றதோ, இறைவனை போய் சேர வில்லையோ? எப்படி சூரிய ஒளி இந்த

கூடாரத்துக்குள் ஊடுருவ முடிந்ததில்லையோ, அது போல எனது பிரார்த்தனை இறைவனைப் போய்

சேர வில்லையோ? இந்த கூடாரம் ஒரு டிராகுலா போன்றதோ, ஒரு

ஒட்டுண்ணியோ என நினைத்தார்.

பயந்து போய் நட்ட நடு இரவில்

இருளில் உடனே அந்த கூடாரத்தை விட்டு தப்பியோடி விட்டார்.

ஆனால் அதே சமயத்தில் அந்த அடர்ந்த

மரக் கூட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஒரு பிச்சைக்காரன் ஒரு

நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்க்கு போய் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு

காட்டிற்க்குள் போக வேண்டுமென்ற தீவிர வேட்கை எங்கிருந்தோ தோன்றியது. அவன் அந்த

அவாவை அலட்சியம் செய்தான். காலைக்குள் அடுத்த ஊருக்குப் போய் சேர்ந்தாக வேண்டும்,

இன்னும் பாதி தூரம் கூட போய் சேர வில்லை. எதற்காக காட்டிற்க்குள் போக வேண்டும்? அது

ஆபத்தானது, காட்டிற்க்குள் விலங்குகள் இருக்கும், அவனுக்கு அங்கென்ன வேலை என

நினைத்தான். ஆனால் ஏதோஒன்று அவனை இழுத்தது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

அவன் வகையற்று போனான். அவன் பைத்தியம் பிடித்தாற்போல காட்டிற்க்குள் ஓடலானான்.

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என அவன் நினைத்தான். ஆனால் அவனது உடல் அவனது

கட்டுப்பாட்டில் இல்லாமல் அதன் போக்கில் இயங்கியது. அவன் தப்பியோட நினைத்தான்.

காட்டுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானது, அவன் பயந்தான், நடுங்கினான் – ஆனால்

பயனில்லை. ஆனால் அவன் அந்த மரக்கூடாரத்தை நெருங்கியவுடன் அவனுக்கு புரிந்தது.

அந்த மரக்கூடாரத்திலிருந்து ஒரு

மெல்லிய குரல் வந்தது. என்னிடம் வா. அது புற செவிகளுக்கு கேட்காது, ஆனால் அது

அவனுக்கு கேட்டது. அந்த கூடாரம் நம்பவே முடியாத அளவு ஜொலித்தது. அந்த முழு

கானகமும் இருட்டில் இருக்க, இந்த கூடாரம் மட்டும் தனியாக நீல வண்ணத்தில்

மின்னியது.

அது ஏதோ வேறு ஒரு உலகம் போலவும்,

அந்த மரத்திற்கு அடியில் ஏதோ ஒரு புத்தர் அமர்ந்திருப்பது போலவும், அதன் அடியில்

யாரோ ஒருவர் ஞானமடைந்தது போலவும், அந்த மரத்தை சுற்றி ஞானஒளியும், முக்தி நிலையின்

அமைதியும் பரவசமும் பரவி படர்ந்திருந்தது. அவன் அந்த மரத்தைச் சுற்றி ஒரு அதிர்வலை

இருந்ததை உணர்ந்தான். இப்போது அந்த பயம் போய் விட்டது. அவன் அந்த

மரக்கூடாரத்தினுள் நுழைந்தான். நுழைந்த அந்த கணமே அந்த நிலைமாற்றமடைந்தான். ஒரு

புதிய மனிதனாக பரிமணித்தான். அவனால் அவனை நம்பவே முடிய வில்லை. அவன் ஒரு சாதாரண

மனிதன், நல்லவனுமல்ல, கெட்டவனுமல்ல, ஒரு சராசரியான மனிதன்.

அன்றாட வாழ்க்கையின்

சிக்கல்களில், குழப்பங்களில், ஆழ்ந்து கிடப்பவன். அவன் ஒரு ஆத்திகனுமல்ல,

நாத்திகனுமல்ல. உண்மையில் அவன் கடவுளைப்பற்றி எனக் குறிப்பாக எதையும் நினைத்தது

கிடையாது. மதத்தைப்பற்றி எந்த கொள்கையும் கிடையாது. அவன் அதைப் பற்றி கவலைப்

பட்டதே கிடையாது. வாழ்க்கையின் பல பிரச்னைகளோடு அவன் போராடிக்

கொண்டிருந்தான்…..ஆனால் திடீரென அந்த மரக்கூடாரத்தில் நுழைந்தவுடன் அவன் ஒரு

சுழலில் சிக்குண்டான். அவன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான், அவனால் நம்பவே முடியவில்லை.

– அவன் அந்த விதமாக அது வரை அமர்ந்ததே இல்லை. அவன் ஒரு சூஃபி ஞானியை போல

அமர்ந்தான். அவனுள் ஒரு லயம் பரவியது, அவன் இருப்பினுள் ஒரு நாதம் எழுந்தது. அவனது

உள்ளிருந்து ஒரு ஓசை ஒலித்தது. என்ன நடக்கிறதென்றே அவனுக்கு புரிய வில்லை. அது ஒரு

அதிசயம். இன்னவென்று அவன் அறிந்திராத ஒரு சத்தம் அவனுக்குள்ளிருந்து வெடித்துக்

கிளம்பியது. மெதுமெதுவாக, அந்த பரபரப்பு அடங்கியவுடன், எல்லாமும் அமைதி பட்டவுடன்

அவனால் அந்த சத்தத்தை கேட்க முடிந்தது, அந்த ஓசை தெளிவடைந்தது, வடிவற்றது

வடிவமடைந்தது, அப்போது அது என்னவென்று அவனுக்கு தெரிந்தது. அது வேறு எதுமல்ல –

அல்லா, அல்லா – இப்போது அவனையும் அறியாது

அவனே அதை சொல்லத் துவங்கினான். அவன் அதை சொல்ல வில்லை. அவன் செய்பவனல்ல. அது

நிகழ்ந்தது. அவன் ஒரு சாட்சியாளனாக இருந்து அதைப் பார்த்தான்.

ஏதோ ஒரு பிரபஞ்ச கடலின் கரையில்

அவன் இருப்பதைப் போலவும், பெரும் அலை வந்து அவன் மீது நீரை வாரி இறைப்பதை போலவும்

இருந்தது. – அல்லா, அல்லா, அல்லா – கடலின் பிரமாண்டமான அலை கரையில் இருந்த அவனை

முழுவதுமாக நனைத்து சென்றது.

நிலைமாற்றமடைந்த அவன் பல்லாயிரம் தடவை அன்றைய இரவில் இறந்து பிறந்தான்.

பதினெட்டு வருடங்கள் அந்த சாதகன்

அங்கே இருந்தான், எதுவும் நடக்கவில்லை. பதினெட்டு மணி நேரங்களில் அந்த

பிச்சைக்காரன் புத்தனாகி விட்டான். அவன் எதுவும் செய்யவில்லை. எனக்கு இந்த கதை

மிகவும் பிடித்தது. லா வேட்ஸூ இந்த கதையை மிகவும் விரும்பி இருப்பார். அவரால் இந்த

கதையை புரிந்து கொள்ள முடியும். இதன் ரகசியம் என்ன? இது இயல்புக்கு முரணானதாக தெரிகிறது.

பதினட்டு வருடங்கள் முயற்சி செய்தவனுக்கு எதுவும் நிகழ வில்லை, பிரார்த்தனையே

செய்யாதவனுக்கு பதினட்டு மணி நேரங்களில் எல்லாமும் கிடைத்து விட்டது. இந்த கதையின்

பொருள் என்ன?

லா வேட்ஸூ எப்போதும் ஒரு வார்த்தை

கூறுவார். அது வூ வீ. அதன் பொருள் செயலற்ற செயல்.

செயலற்று செயல் செய்தல். செயல் செய்தலும் செயலற்று போதலும் ஒருங்கிணைத்து

இருப்பது. இதுதான் ரகசியம். அந்த சாதகன் அதிகப்படியாக செய்தான். அவன் தன்னை சமமாக

நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. அவன் அதிகமாக செய்தது செய்யாதது போன்றதுதான்.

வாழ்க்கை ஒரு சமன்பாடுதான். அவன்

சமப்படுத்திக் கொள்ள வில்லை. அடைவதற்கான பேராசையினால், லட்சியத்தினால், அவன்

எல்லைக்கே சென்று விட்டான். அவன் மிகவும் ஈடுபட்டு விட்டான்.

எப்போதெல்லாம் நீ மிகவும்

செயல்படுபவனாக இருக்கிறாயோ, எப்போதெல்லாம் செயல்படுபவனாக மட்டுமாக இருக்கிறாயோ,

அப்போது இந்த உலகின் விஷயங்கள் அனைத்தும் ஒத்துவரும் – ஆனால் அக உலகின் விஷயங்கள்

உனக்கு நிகழாது போய் விடும். ஏனெனில் நீ மிகவும் பதற்றத்தோடும், தவிப்போடும்

இருப்பதால் ஏற்றுக் கொள்வதற்க்குரிய நிலையில் நீ இல்லை. செயலுக்கும் செயலற்ற

நிலைக்கும் இடையில் சமனோடு, நேர்மறைக்கும் எதிர்மறைக்கும் இடையில் சமனோடு, எல்லா

இரட்டை தன்மைகளுக்கும் இடையில் சமமாக யார் இருக்கிறார்களோ அவர்களால்தான் பெற்றுக்

கொள்ள முடியும். 

மாறுபாடே மரணம்!

 மாறுபாடே மரணம்! பேசாலைதாஸ்


ஒவ்வொரு நாள் காலையிலிருந்தும் மரணம் உன்னை தொடர ஆரம்பி க்கிறது... 
இறைச்சலின் உச்சபட்ச ஒலிதான் மரணம். மரணம் வெவ் வேறு வழிகளில் வருகிறது. நீ சாவது ஒருவகையான மரணம் மட்டுமே. இன்னும் பல மரணங்கள் உண்டு....

உன் அன்னை இறந்தால் நீயும் தான் இறக்கிறாய். ஏனெனில் அன்னையின் ஒரு பகுதிதான் நீ. அந்த பகுதி அப்போது இறந்துவிடுகிறது....

உன தந்தை இறந்தால், உன் சகோதரன், உன் சகோதரி, உன் நண்பன் என யார் இறந்தாலும் உன்னுடைய  ஒரு பகுதி இறக்கத்தான் செய்கிறது....

உன் விரோதி இறக்கும்போது ஒரு பெரும்பகுதி உன்னுள் இறந்து விடுகிறது... 

ஒவ்வொருவரின் மரணத்தின் முடிவிலும் நீ வேறுவிதமாக மாறிவிடுகிறாய்...

நீ பிறந்தவுடன் குழந்தையாக இருக்கிறாய்... பின்பு இளைஞனாக மாறுகிறாய், பின்பு முதுமையை அடைகிறாய்... ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் நீ இறந்துகொண்டுதான் இருக்கிறாய்... 

குழந்தை பருவத்தை நீ கடக்கும்போது அதற்கான கதவு மூடப்படுகிறது... 

நீ இறந்து இளைஞனாக மாறுகிறாய்... 

இன்னும்போனால் ஒவ்வொரு கணத்திலும் உன்னுடைய ஒருபகுதி மாற்றமடைந்து வேறொரு பகுதி நுழைவதை உணர்வாய்.... 

அப்போது ஒவ்வொரு கனமும் மரணம் உன்னை கடந்து தான் செல்கிறது...

அந்த மரணங்கள் எந்த தடயமுமில்லாமல் உன்னை கடந்து சென்றுவிடுகின்றன....

மற்றொரு நுண்ணிய மரணமொன்று உண்டு....

அது தான் காதல்... காதல் என்பது தூய்மையான மரணம்... யாராவது மரணமடைய விரும்பினால் அவர்கள் காதலில் விழலாம்.. .எல்லோரும் காதலை விவாதிக்கிறார்கள்... புத்துணர்வு கொள்கிறார்கள்... 

ஆனால் பெரும்பாலோர் காதலில் இறங்க பயப்படுகிறார்கள்... 

ஏனென்றால் காதல் என்பது மரணம்.... காதல் அச்சம் கொள்ளவைக்கிறது... காதலிக்கும் இருவரில் ஒருவருக்குள் இன்னொருவர் இறந்து தான் ஆகவேண்டும்... அது தான் காதல்... 

மற்றதெல்லாம் ஒரு விளையாட்டு தான். இந்த விளையாட்டு காதலெல்லாம் பேச்சளவில் தான் இருக்கும்.... 

உண்மையாக காதலிப்பதற்கு பயப்படுவதன் காரணம் மரணிக்க தயாராக இல்லாதது தான் காரணம் ஒருவன் தன் இணைக்குள் மரணிக்காமல் காதலில் இறங்கமுடியாது....

இது தான் முக்கிய மரணம்....

தியானம் என்பது மற்றொரு மரணமாகும்... 

உனக்குள் நீ மரணிக்கும் நிகழ்வாகும்....

இதுவரை படித்திருப்பாய்... கேள்விப்பட்டிருப்பாய்....  

ஆனால் நீயாக தியானத்திற்குள் நுழையும்போது உன்னை நீ முற்றிலுமாக இழந்து விடுகிறாய்.... 

விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் தியானமானது ஒருவரை ஆழமான நிரந்தர மரணத்தில் தள்ளிவிடுவதும் உண்டு....

நீ ஒரு குருவிடம் சரணாகதியடையும்போது மற்றொரு மரணம் நிகழ்கிறது....

அது உன் அகங்காரத்தின் மரணம்.

ஒரு கட்டத்தில் உன் அகங்காரம் மறைந்தே போய்விடுகிறது.... 

மேற்கண்ட மரணங்களை தன்னுள் கொண்டது தான் வாழ்க்கை....

மனிதர்களின் மரணங்கள் மட்டும் உன்னுள் மரணத்தை தோற்றுவிப்பதில்லை.... 

உன் செல்ல நாய், மரங்கள், செல்லபிராணிகள், ஒரு அழகிய பறவை என எவை மரணித்தாலும் உனக்குள் மரணம் நிகழ்ந்துவிடுகிறது.... 

பிரபஞ்சத்தில் மரணம் நிகழ்வதும் மீண்டும் உயிர்கள் தோற்றுவிக்கப்படுவதும் தொடர்ச்சியான நிகழ்வுகளாகும்....

மரணம் என்பது பிரபஞ்ச மாயையாகும்...

சிரிக்காமல் சிரிக்கின்றார் புத்தர்!

 சிரிக்காமல் சிரிக்கின்றார் புத்தர்!  பேசாலைதாஸ்


துறவு என்பது ஞானமடை தலுக்கான வழி 
இது தோற்ற ங்களிலிருந்து விடுபட வைக் கிறது இந்த வழியின் சாரா ம்சம் ஒட்டாதிருப்பது

அதாவது துறவு போதி தர்மன் சொன்னான்.....'புத்தன் சிரிக்காமலேயே சிரித்துக் கொண்டிருக்கிறார்" என்று.....

யாருமே இதுவரை புத்தன் சிரித்துக் கொண்டிருப்பதான சிலையை பார்த்ததில்லை

அவரின் இருப்பே சிரிப்புதான்

சிரிப்பின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

உங்கள் சிரிப்புக்கும் புத்தனின் சிரிப்புக்கும் வேறுபாடு உண்டு

உங்கள் வாழ்வு எந்த நேரத்திலும்

ஏதாவது நிகழ்வுகளின் பாதிப்பால் அலைக்கழிக்கப்பட்டு

துன்பம் நேரலாம் என்ற மனநிலையில்

ஏதாவது ‘அபத்தமாக’ நடந்தால்

அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிரித்துவிடுகிறீர்கள்

அந்த அபத்தம் உங்களுக்கு தப்பிக்க உதவுகிறது

துன்பத்தை மறக்க

டென்ஷன் மறைகிறது

சிரிப்பு ஆரோக்கியமானது

நிமிடத்தில் உடலை வேறு நிலைக்கு எடுத்து சென்று விடுகிறது

ஆனால் அதுவும் ஒரு சில நிமிடத்துக்குத்தான்

பின் மறுபடி உன் இருட்டுக் குகைக்குள் போய்விடுகிறாய்

உண்மைதான் உன் கனவு எதனால் ஆனதோ.....

அதனால் ஆனதே இந்த வாழ்வும்

ஆனால்

கனவை நீ ஒரு மாயை என்கிறாய்...

நனவை 'மிகுந்த சிரமப்பட்டு' தலையில் வைத்துக் கொண்டாடுகிறாய்

கனவுக்கும் நீ நினைவு என்று சொல்வதற்கும் வித்தியாசமே இல்லை

இந்த உலகில் வாழ்

ஆனால்

இந்த உலகம் உன்னுள் இருக்கக் கூடாது

நினைவிருக்கட்டும்

இது எல்லாமே அழகான கனவுதான்

இந்த வாழ்வு என்பது

மாறிக்கொண்டும்

மறைந்துகொண்டும்

தோன்றிக் கொண்டும் இருக்கிறது

கனவும் அப்படித்தானே.......!!!

அதனால் இந்த நினைவுடன் ஒட்டிக் கொண்டிராதே

எப்படி தூங்கி எழுந்ததும் கனவுடன் ஒட்டிக் கொள்ளாமல் விடுபட்டுவிடுகிறாயோ அப்படி...

ஒட்டிக் கொண்டிருப்பது என்பது விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது

அப்படி ஒட்டுதல் இல்லாமல் இருக்கையில்

‘அபரிமிதமான ஆற்றல்’ விடுபடுகிறது

இவைகளுடன் ஒட்டிக் கொண்டுள்ளதால்

சிறைபட்டுள்ள அந்த ஆற்றல்

ஒரு புதிய உதயத்தை,

புதிய இருப்பை,

புதிய ஒளியை,

புதிய புரிதலை உனக்குள் கொண்டுவரும்

பிறகு துன்பம் என்பதே இல்லை

இது நடக்கையில் நீ மிகவும் அமைதியான.....

இதுவரை அனுபவித்திராத அமைதியுடன் இருப்பாய்

உன் இருப்பிலேயே சிரிப்பு வெடித்துக் கொண்டிருக்கும்

அதைத்தான் போதிதர்மன் சொன்னான்

"புத்தன் சிரிக்கிறான் ஆனால் சிரிக்காமலேயே

குருவும் குழந்தையும்

 குருவும் குழந்தையும்  பேசாலைதாஸ்


ஹாசன் என்ற சூஃபி ஞானி மரணப்படுக்கையில் இருந்தார். 

அப்போது சீடன் ஒருவன் அவரிடம் கேட்டான்....  

உங்கள் குரு யார்?  என்று நீங்கள் இதுவரை சொல்லவே இல்லையே!!  

நாங்களும் பலமுறை கேட்டு விட்டோம்,  நீங்கள் பதில் சொல்லவில்லை. 

இப்போதாவது சொல்லுங்கள்.

குரு சொன்னார் நான் பலரிடம் இருந்து பாடம் பயின்று இருக்கிறேன்!! 

ஆனால் எனது முதல் குரு ஒரு சிறிய குழந்தை!!

சீடர்களுக்கு வியப்பாக இருந்தது. மேலும் குரு சொன்னார்... 

அப்போது எனக்கு ஞானம் வந்து இருக்கவில்லை என்றாலும் உலக அறிவு மிக அதிகமாக இருந்தது நான் மிகப்பெரிய மேதாவியாக இருந்தேன் என் புகழ் நாடு முழுவதும் பரவியிருந்தது எனக்கு எல்லாம் தெரியும் என்று மக்கள் என்னைத் தேடி வர ஆரம்பித்தார்கள்.

நானும் எனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் பாசாங்கு செய்ய ஆரம்பித்தேன் பிறகு பாசாங்கு செய்கிறேன் என்பது மறந்துபோகும் அளவுக்கு பேசி வந்தேன்.

நான் எனது முழு உணர்வு நிலையிலிருந்து செயல்படவில்லை.ஞானம் அடையாமலேயே நான் மிகப்பெரிய ஆசான் ஆகிவிட்டேன்.

பேருண்மையை அனுபவரீதியாக பெறாமலேயே நான் பெரிய பெரிய விஷயங்களைப் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விட்டேன். 

மக்கள் என்னை தேடி வந்தார்கள் எல்லா புனித நூல்களும் மனப்பாடமாகத் தெரியும் யாராவது ஏதாவது கேட்டால் உடனே நான் எடுத்துவிடுவேன் அவர்கள் பயந்து போய் நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த நிலையில் மூன்று நாட்கள் ஒரு வெளியூர் பயணத்தில் யாருக்குமே அடையாளம் தெரியாத இடத்தில் நான் மாட்டிக்கொண்டேன்.

எனக்கு மிகுந்த பசியாக இருந்தது. யாரிடமாவது கேட்கவேண்டும் என்று யாரையாவது தேடிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு சிறுவன் கையில் விளக்குடன் போய்க்கொண்டிருந்தான் அவனை நிறுத்தி கேட்டேன் குழந்தாய் இந்த விளக்கை எங்கே எடுத்துக்கொண்டு போகிறாய்?

அவன் சொன்னான் கோயிலில் கொண்டு இந்த விளக்கை வைக்க என்றான்.

அவனிடம் என்னுடைய மேதாவித்தனத்தை காட்டுவதற்காக, குழந்தாய் இந்த விளக்கை நீதானே ஏற்றினாய்?  என்றேன். அவன் ஆமாம் என்றான்.

மேலும் அவனிடம் கேட்டேன்,  இந்த விளக்கை நீதான் ஏற்றினாய் என்றால் இந்த ஜோதி, இந்த ஒளி எங்கிருந்து இந்த விளக்கிற்குள் வந்தது, என்று உன்னால் சொல்ல முடியுமா?

அந்த சிறுவன் சற்று என்னை உற்று பார்த்துவிட்டு, உடனே அந்த விளக்கை ஊதி அணைத்துவிட்டு...  

இப்பொழுது அந்த ஒளி எங்கே போய் விட்டதோ அங்கிருந்து தான் வந்தது. அது எங்கிருந்து வந்தது என்பதை நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள் என்றான்.

அந்தக் குழந்தையிடம் நான் தோற்றுவிட்டேன் அவன் தான் என்னுடைய முதல் குரு என்றார் ஹாசன்.

ஒரு வழிப்போக்கன் ஒரு சிறுவனை பார்த்து கேட்டான் இப்போது மணி என்ன என்று சொல்ல முடியுமா?

அந்த சிறுவன் சொன்னான்...சொல்லலாம் ஆனால் நொடிக்கு நொடி காலம் நேரம் மாறிக்கொண்டே இருக்கிறது நான் உங்களிடம் ஒரு நேரத்தை சொல்லும்பொழுது அடுத்த நொடி வந்து விடுகிறது நான் எதைச் சொல்ல என்றான்.

ஒரு தாய் தன் குழந்தையை ஒரு பார்ட்டிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள்.

அவனுக்கு நேர்த்தியான உடைகள் உடுத்தி அவனுக்கு தலையை வாரி,  பிறகு அவனிடம் சொன்னாள் பார்ட்டியில் மகிழ்ச்சியாக இரு!! அதேநேரம் கவனமாக கட்டுப்பாட்டுடன் இரு என்றாள்!!

அந்தச் சிறுவன் அவனது தாயிடம் கேட்டான் ஒரே நேரத்தில் இரண்டையும் எப்படி செய்யமுடியும்?

அவன் கேட்டான் கட்டுப்பாடாக இருந்தால், எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

அந்தத் தாய்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

குழந்தைகளை கவனியுங்கள் உண்மையில் அவர்கள் உங்களை விட புத்திசாலிகள்.

பகவான் ரமணரிடம் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் கேட்டார் ஞானம் அடைவதற்கு எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று.

அதற்கு ரமணர் சொன்னார்...  

நீ எதையும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை. 

நீ எதையெல்லாம் இதுவரை  கற்றிருந்தாயோ அதையெல்லாம் விட்டு விட வேண்டும்  அவ்வளவுதான். 

நீ ஒரு குழந்தையாக மாற வேண்டும் என்றார்.

இயேசு சொன்னார் நீங்கள் சாதாரணமாக இருங்களேன்.

ஏன் நீங்கள் விசேஷமானவர்கள் என்று காட்டிக் கொள்கிறீர்கள்?

குழந்தைகள் சாதாரணமாகத் தான் இருக்கிறார்கள். 

பெற்றோர்களே அவர்களை அசாதாரணமாக மாற்றிவிடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு எதுவும் கற்றுத் தராமல் இருந்தாலே போதும். வேண்டுமென்றால் நீங்கள் அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்........

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்று!!