குருவும் குழந்தையும் பேசாலைதாஸ்
ஹாசன் என்ற சூஃபி ஞானி மரணப்படுக்கையில் இருந்தார்.
அப்போது சீடன் ஒருவன் அவரிடம் கேட்டான்....
உங்கள் குரு யார்? என்று நீங்கள் இதுவரை சொல்லவே இல்லையே!!
நாங்களும் பலமுறை கேட்டு விட்டோம், நீங்கள் பதில் சொல்லவில்லை.
இப்போதாவது சொல்லுங்கள்.
குரு சொன்னார் நான் பலரிடம் இருந்து பாடம் பயின்று இருக்கிறேன்!!
ஆனால் எனது முதல் குரு ஒரு சிறிய குழந்தை!!
சீடர்களுக்கு வியப்பாக இருந்தது. மேலும் குரு சொன்னார்...
அப்போது எனக்கு ஞானம் வந்து இருக்கவில்லை என்றாலும் உலக அறிவு மிக அதிகமாக இருந்தது நான் மிகப்பெரிய மேதாவியாக இருந்தேன் என் புகழ் நாடு முழுவதும் பரவியிருந்தது எனக்கு எல்லாம் தெரியும் என்று மக்கள் என்னைத் தேடி வர ஆரம்பித்தார்கள்.
நானும் எனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் பாசாங்கு செய்ய ஆரம்பித்தேன் பிறகு பாசாங்கு செய்கிறேன் என்பது மறந்துபோகும் அளவுக்கு பேசி வந்தேன்.
நான் எனது முழு உணர்வு நிலையிலிருந்து செயல்படவில்லை.ஞானம் அடையாமலேயே நான் மிகப்பெரிய ஆசான் ஆகிவிட்டேன்.
பேருண்மையை அனுபவரீதியாக பெறாமலேயே நான் பெரிய பெரிய விஷயங்களைப் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விட்டேன்.
மக்கள் என்னை தேடி வந்தார்கள் எல்லா புனித நூல்களும் மனப்பாடமாகத் தெரியும் யாராவது ஏதாவது கேட்டால் உடனே நான் எடுத்துவிடுவேன் அவர்கள் பயந்து போய் நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.
இந்த நிலையில் மூன்று நாட்கள் ஒரு வெளியூர் பயணத்தில் யாருக்குமே அடையாளம் தெரியாத இடத்தில் நான் மாட்டிக்கொண்டேன்.
எனக்கு மிகுந்த பசியாக இருந்தது. யாரிடமாவது கேட்கவேண்டும் என்று யாரையாவது தேடிக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது ஒரு சிறுவன் கையில் விளக்குடன் போய்க்கொண்டிருந்தான் அவனை நிறுத்தி கேட்டேன் குழந்தாய் இந்த விளக்கை எங்கே எடுத்துக்கொண்டு போகிறாய்?
அவன் சொன்னான் கோயிலில் கொண்டு இந்த விளக்கை வைக்க என்றான்.
அவனிடம் என்னுடைய மேதாவித்தனத்தை காட்டுவதற்காக, குழந்தாய் இந்த விளக்கை நீதானே ஏற்றினாய்? என்றேன். அவன் ஆமாம் என்றான்.
மேலும் அவனிடம் கேட்டேன், இந்த விளக்கை நீதான் ஏற்றினாய் என்றால் இந்த ஜோதி, இந்த ஒளி எங்கிருந்து இந்த விளக்கிற்குள் வந்தது, என்று உன்னால் சொல்ல முடியுமா?
அந்த சிறுவன் சற்று என்னை உற்று பார்த்துவிட்டு, உடனே அந்த விளக்கை ஊதி அணைத்துவிட்டு...
இப்பொழுது அந்த ஒளி எங்கே போய் விட்டதோ அங்கிருந்து தான் வந்தது. அது எங்கிருந்து வந்தது என்பதை நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள் என்றான்.
அந்தக் குழந்தையிடம் நான் தோற்றுவிட்டேன் அவன் தான் என்னுடைய முதல் குரு என்றார் ஹாசன்.
ஒரு வழிப்போக்கன் ஒரு சிறுவனை பார்த்து கேட்டான் இப்போது மணி என்ன என்று சொல்ல முடியுமா?
அந்த சிறுவன் சொன்னான்...சொல்லலாம் ஆனால் நொடிக்கு நொடி காலம் நேரம் மாறிக்கொண்டே இருக்கிறது நான் உங்களிடம் ஒரு நேரத்தை சொல்லும்பொழுது அடுத்த நொடி வந்து விடுகிறது நான் எதைச் சொல்ல என்றான்.
ஒரு தாய் தன் குழந்தையை ஒரு பார்ட்டிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள்.
அவனுக்கு நேர்த்தியான உடைகள் உடுத்தி அவனுக்கு தலையை வாரி, பிறகு அவனிடம் சொன்னாள் பார்ட்டியில் மகிழ்ச்சியாக இரு!! அதேநேரம் கவனமாக கட்டுப்பாட்டுடன் இரு என்றாள்!!
அந்தச் சிறுவன் அவனது தாயிடம் கேட்டான் ஒரே நேரத்தில் இரண்டையும் எப்படி செய்யமுடியும்?
அவன் கேட்டான் கட்டுப்பாடாக இருந்தால், எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
அந்தத் தாய்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
குழந்தைகளை கவனியுங்கள் உண்மையில் அவர்கள் உங்களை விட புத்திசாலிகள்.
பகவான் ரமணரிடம் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் கேட்டார் ஞானம் அடைவதற்கு எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று.
அதற்கு ரமணர் சொன்னார்...
நீ எதையும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை.
நீ எதையெல்லாம் இதுவரை கற்றிருந்தாயோ அதையெல்லாம் விட்டு விட வேண்டும் அவ்வளவுதான்.
நீ ஒரு குழந்தையாக மாற வேண்டும் என்றார்.
இயேசு சொன்னார் நீங்கள் சாதாரணமாக இருங்களேன்.
ஏன் நீங்கள் விசேஷமானவர்கள் என்று காட்டிக் கொள்கிறீர்கள்?
குழந்தைகள் சாதாரணமாகத் தான் இருக்கிறார்கள்.
பெற்றோர்களே அவர்களை அசாதாரணமாக மாற்றிவிடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு எதுவும் கற்றுத் தராமல் இருந்தாலே போதும். வேண்டுமென்றால் நீங்கள் அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்........
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்று!!

No comments:
Post a Comment