இயற்கையின் சீதனம் மனைவி. பேசாலைதாஸ்
ஜீவிதம் ( வாழ்க்கை ) எப்போதுமே
மிகவும் நியாயமானது.
இயற்கை எப்போதும்
நமது வாழ்க்கையை
தரம் பிரித்து பார்ப்பதில்லை.
மழை, வெயில், காற்று,
நீர், நிலம், தென்றல் என
இயற்கை தருவதை அனைவருக்கும் சமமாகவே தருகிறது.
வசதியான வாழ்க்கை,
எளிமையான வாழ்க்கை என்று பிரித்துப் பார்பதெல்லாம்,
மனிதனின் மன நோயால் எழுகிற எண்ணங்கள்.
வாழ்க்கையே இயற்கையின்
கொடை என்பதால்,
அது தருவதில்
ஏற்றத் தாழ்வுகள் பார்ப்பதில்லை.
மனைவி அமைவதும் இயற்கையின் கொடையே.
ஆனால்,
பெரும்பாலான ஆண்களின் எண்ணங்கள் எல்லாம்,
' அடுத்தவனுக்கு அழகான, அமைதியான மனைவி கிடைத்திருக்கிறாள்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி வந்து வாய்த்தாள் ? ' என்று
புலம்பலாகவே இருக்கிறது.
உன் மனைவி,
உனக்கு இணையாக இருக்க அருகதை இல்லாதவள் என்று ஒருபோதும்
நினைத்து விடாதே.
நீ நன்றாக படித்திருக்கலாம்,
உன்னிடம் நிறைய பணம் இருக்கலாம்,
அதிக உடல் வலிமை மிக்கவனாகவும் இருக்கலாம்,
இது போன்றவை எல்லாம்
இன்பமான வாழ்க்கைக்கு
ஆதாரமானது இல்லை
என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால்,
இவற்றை வைத்துதான்
உன் மனைவியை நீ
எடை போடுகிறாய்.
இங்கே பெரும்பாலானோர்,
காமத்தை முன்னிருத்தியே
திருமணம் செய்து கொள்ளுகின்றனர்.
மிக முக்கிய தேவையான,
காதல், அன்பு இவைகள் எல்லாம்
பின் தள்ளப்பட்டு விடுகிறன.
உண்மையாக
உனக்கு எதற்கு அருகதை இருக்கிறதோ,
அதுதான் உனது துணைவியாராக கிடைக்கும்.
கூடவோ குறையவோ கிடைத்து விடாது.
எனவே,
நீ உன்னுள் திரும்பிப் பார்.
உன் மனைவி உனக்கு நிகரில்லை என்று நீ நினைத்தால்,
உன்னிடம் தான் ஏதேனும் குறையிருக்க வேண்டும்.
உன்
வார்த்தைகள் மென்மையாக இல்லாமல் இருக்கலாம்,
நீ கூர்ந்த உணர்வில்லாதவனாக இருக்கலாம்,
பயன்படுத்திக் கொள்ளதான் பெண்,
மற்றபடி அவளிடம் வேறு என்ன இருக்கிறது ? ' என்ற
ஒருவிதமான அலட்சிய மனப்பான்மை உடையவனாக நீ இருக்கலாம்.
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.
உனது வாழ்க்கை,
உன்னை விட்டு நழுவி விடாமல் இருக்க வேண்டும் என்றால்,
உன் மனைவியை மதித்திரு.
அன்பாயிரு.
எப்போதுமே ஒன்றை நினைவில் வைத்திரு.
உனது காதலுக்கு,
காமம் தான் விதை என்றால்,
ஆத்மார்த்தமான வாழ்க்கை உனக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
வாழ்க்கையை தவற விட்டு விடுவாய்.
அக ஜீவிதத்தில் உண்மையான
அன்பு ஒருங்கிணைந்திருக்கும்
போது மட்டுமே,
புற வாழ்க்கையில்
மகத்தான ஆனந்தம் எழுகிறது.
அப்போது
நீ எந்த குறையும் இல்லாமல்,
மீண்டும் புதிதாய் பிறப்பெடுத்து வருவதுபோல் உணர்வாய்.
இது நிச்சயம்.

No comments:
Post a Comment