ஓர் ஊருக்கு அழகான பெண்ணொருத்தி
எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றினாள்
அவள் எங்கிருந்து வந்தாள்
அவள் யார் என்ற விபரங்கள் யாருக்குமே தெரியவில்லை
ஆனால், அவள் பேரழகி
ஊரே ஒன்று கூடி அவளைப் பார்த்துத் திகைத்தது
ஊரில் இருந்த அத்தனை இளைஞர்களும்
சுமார் 300 பேர் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்
அவள் அவர்களை அழைத்தாள்
"நானோ ஒருத்தி
நீங்களோ 300 பேர்
நான் ஒருவரைத்தானே மணக்க முடியும்..???
அதனால் ஒன்று செய்யுங்கள்
நான் நாளைக்கு வருகிறேன்
உங்களுக்கு 24 மணி நேர கால அவகாசம் தருகிறேன்
உங்களில் யார் புத்தரின் தாமரைச் சூத்திரத்தை மனப்பாடமாக ஒப்புவிக்கிறார்களோ
அவரை நான் மணந்து கொள்கிறேன் என்றாள்
இளைஞர்கள் அனைவரும் தம் வீடுகளுக்கு ஓடினார்கள்
உண்ணவில்லை; உறங்கவில்லை.
இரவும் பகலுமாய் அதை மனப்பாடம் செய்வதில் முனைந்தார்கள்
அடுத்த நாள் காலையில் அவள் வந்தாள்
பத்து இளைஞர்கள் அதை ஒப்புவித்து விட்டார்கள்
"சரி... நானோ ஒருத்தி
எப்படி 10 பேரை மணப்பது ....???
இன்னொரு 24 மணி நேரம் தருகிறேன்
யார் அதன் பொருளைச் சரியாக விளக்குகிறார்களோ
அவரை நான் மணக்கிறேன் நான் சொல்வதை புரிந்துகொள்ளுங்கள்
ஒப்புவித்தல் எளிய காரியம்
புரிந்து கொள்ளாமலே கூட ஒப்புவித்து விட முடியுமே," என்றாள்
நேரமே இல்லை
ஒரு பகலும், ஓர் இரவுமே இருக்கிறது
தாமரை சூத்திரமோ நீளமானது
போதை வந்துவிட்டால் வேறு வழி ஏது..???
எதையும் செய்யத் துணிந்து விடுவார்கள்
திரும்பி ஓடினார்கள்
கடுமையாக அதை புரிந்துகொள்ள முயன்றார்கள்
மறுநாள் மூன்று பேர் மட்டுமே வந்து நின்றார்கள்
அவர்களுக்கு பொருள் விளங்கிவிட்டது
அழகி சொன்னாள்
" மறுபடியும் சிக்கல் ஏற்பட்டு விட்டதே
எண்ணிக்கை என்னவோ குறையத்தான் செய்கிறது
ஆனால், சிக்கல் அப்படியே தான் இருக்கிறது
300லிருந்து 3 என்பது பெரிய வளர்ச்சிதான்
ஆனால், மூவரை நான் எவ்வாறு மணப்பது..???
ஒருவரைத் தானே மணக்க முடியும்
ஆகவே, இன்னொரு 24 மணி நேரம் தருகிறேன்
சூத்திரத்தைப் புரிந்து கொண்டதோடு நில்லாமல்
அதன் சுவையை யார் உணர்ந்திருக்கிறார்களோ
அவரை நான் மணக்கிறேன்
நீங்கள் நன்றாகவே விளக்கினீர்கள்
விளக்கம் அறிவுபூர்வமானது
நேற்றைவிடச் சிறப்புதான்
ஆனால், விளக்கம் அறிவுபூர்வமானதாயிற்றே..!!!
தியானச் சுவை, சுவையின் மணம் இருக்க வேண்டாமா..???
அந்த தாமரை உங்களுக்குள் பிரவேசித்திருக்க வேண்டும்
நீங்கள் தாமரையாக மாறியிருக்க வேண்டும்
அதன் நறுமணத்தை நான் அனுபவிக்க வேண்டும்
ஆகவே, நாளைக்கு பார்க்கலாம்: என்றாள்
மறுநாள் ஒருவன் மட்டுமே வந்தான்
அவன் சாதித்து விட்டான்
அவள், அவனை ஊருக்கு வெளியில் இருந்த தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்
அந்த வீட்டை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை
மிக அழகான வீடு அது
கனவு மாளிகை
அவளுடைய பெற்றோர் அவனை
வாசலில் வரவேற்றார்கள்
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்
என்றும் சொன்னார்கள்
அந்தப் பெண் உள்ளே போய்விட்டாள்
இளைஞன் அவளுடைய பெற்றோரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தான்
பிறகு அவர்கள்
"அவள் உனக்காக உள்ளே காத்துக் கொண்டிருப்பாள்
இது தான் அவள் அறை," என்று ஒன்றைச் சுட்டிக் காட்டினார்கள்
அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான்
அங்கே யாருமே இல்லை
அவன் அங்குமிங்கும் பார்த்தான்
ஆனால் , ஒரு கதவு, தோட்டத்திற்குச் செல்வது திறந்து கிடந்தது
ஒருவேளை அவள் தோட்டத்திற்குச் சென்றிருக்கலாம் என்று
அதன் வழியாகப் பின்பக்கம் சென்றான்
அங்கே , பாதையில் அவளது காலடிச் சுவடுகள் தென்பட்டன
அவற்றைப் பின்பற்றி நெடுந்தூரம் போனான்
ஒரு மைல் நடந்த பிறகும் அவளைக் காணவில்லை
தோட்டத்தின் எல்லையில் ஓர் ஆறு காணப்பட்டது
அவளது காலடிச் சுவடிகளும் மறைந்து விட்டன
இரண்டு தங்க மிதியடிகள் மட்டுமே காணப் பட்டன
அவை அவளுடைய காலணிகள்
அவன் திகப்படைந்தான்
என்ன நேர்ந்தது...???
அவன் திரும்பிப் பார்த்தான்
தோட்டமும் இல்லை
வீடும் இல்லை
பெற்றார்களும் இல்லை
ஒன்றுமே இல்லை
மறுபடியும் ஆற்றுப் பக்கம் திரும்பினான்
ஆற்றையும் காணோம்
அந்த மிதியடிகளும் காணோம்
அவன் வெட்ட வெளி வெறுமையில் நின்று கொண்டிருந்தான்
அப்போது ஒரு சிரிப்புக் குரல் கேட்டது
அதைக் கேட்டதும் அவனும் சிரித்தான்
அவனுக்குத் திருமணம் நடந்து விட்டது
அழகான பௌத்தக் கதை இது
அவன் வெறுமையை மணந்து கொண்டு விட்டான்
அதாவது , சூனியத்தை
இந்தத் திருமணத்தைத்தான் எல்லா ஞானிகளும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
இயேசு கிறிஸ்துவின்
'மணவாட்டி' ஆகும் கணம் இதுதான்
அல்லது கண்ணனின் ஒரு 'கோபி ' ஆதல்
எல்லாம் மறைந்து போகும்
பாதை, தோட்டம், வீடு, பெண், காலடிச் சுவடுகள் கூட
எல்லாம் எல்லாம் காணாமற் போய்விடும்
மிஞ்சுவது சிரிப்பு மட்டுமே
பிரபஞ்சத்தின் அடி வயிற்றிலிருந்து பிறக்கும் சிரிப்பு அது
No comments:
Post a Comment