நம்முள் இருக்கும் திருடன்
பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே
நாம் வெளியே காட்டுகிறோம்
இதுதான் நமக்குள் இருக்கும் திருடன்
அந்தத் திருடனோடு
நாம் சண்டை இட வேண்டியிருக்கிறது
திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்
அடுத்த வீட்டில் திருடன் ஒருவன் அகப்பட்டால்
நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம்
ஏனெனில்
நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான்
அவனைப் பிடித்துத் தண்டிக்க நினைக்கிறோம்
ஆனால் முடியவில்லை
வெளியே ஒரு திருடன் கிடைத்ததும்
உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம்
நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம்
திருடனைத் தண்டிக்க திருடனின் இருப்பு அவசியம்
புனித மனிதர் ஒருவரால் திருடனை அடிக்க முடியாது
ஆகவே திருடர்களே எப்போதும் திருடர்களைக் கண்டிப்பர்
குற்றவாளிகளே குற்றவாளிகளைக் குறை சொல்வார்கள்
நமக்குள்ளே இருப்பதுதான் வெளியே வெளிப்படும்
''ஒருவன், 'திருடன், திருடன், விடாதே பிடி,' என்று கத்தினால்
அவ்வாறு கத்துபவனை முதலில் பிடிக்க வேண்டும்''
என்று பேரறிஞர் ரஸ்ஸல் சொல்கிறார்
நம் மன நோய்களை நாம் பிறர் மீது சுமத்துகிறோம்
எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும்போது நம்மை நாமே
வெளிப்படுத்திக் கொள்கிறோம்
நமக்குள் ஏற்படும் போராட்டமே
இன்னொருவர் மீது ஏற்றி உரைக்கப்படுகிறது
நமக்குள் முரண்பாடு தோன்றாத போது
போராட்டம் இல்லாதபோது
இன்னொருவர் மீது பழிபோடுதல்
என்பது முற்றிலும் நின்று விடுகிறது
மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும்போது
அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது
ஆனந்த நடனமே அமையும்
மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் துவங்குகிறது
No comments:
Post a Comment