Tuesday, 13 April 2021

நட்ட கல்லு பேசுமோ?,,,,,,,பேசாலைதாஸ்

நட்ட கல்லு பேசுமோ? பேசாலைதாஸ்


இந்த உலகத்தில் தீமைகள் பிரவேசிக்க யார் காரனம்? கடவுளா, மனிதனா? எல் லோருமே கடவுள்தான் காரனம் என்கி ன்றார்கள், கடவுளை ஒரு நபராக பார் க்கின்றார்கள். கடவுள் மகா பிரபஞ்ச சக்தி, பிரபஞ்ச அனைத்தும் கடவுள், நாம் இலகுவாக புரிந்து கொள்ள, ஞானிகள், மெய்வல்லுணர்கள் அதனை ஒற்றை வடிவமாக்கினார்கள். இறுதியில் ஆண்பால் வல்லமையின் எதிரொலியாக கடவுள் அவனாகின்றான். இறுதியில் அவனா இவன்? என வியக்கின்றோம். கடவுள் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. இதுவே என் புரிதல். அவனா இவன்? என்று கேட்கின்றது என் மனம்.
அப்படியானால் மனிதன் யார்? இன்னொரு முறையில் சொன்னால், மனிதன் தான் கடவுள். மனிதன் கடவுளின் இன்னொரு அம்சம் வடிவம். இயற்கையின் சக்தி வடிவமாக கடவுள் செயல்படுகின்றார், அதுபோல மானிட சக்தி மூலமாக வெளிப்படுகின்றது கடவுள் அம்சம். நன்மை தீமை, குளிர் வெப்பம், இன்பம் துன்பம், நல்லது கெட்டது என்று இயற்கை தொடர்கின்றது, இதனை யாரும் படைக்கவில்லை. கடவுளை யாரும் படைக்கமுடியாது. வேதம் தெளிவாக சொல்கின்றது. மனிதன் முதலில் கடவுள் யார்? எது என்று தன் மனதில் கேட்ட பொழுது, அவர்களுக்கு சொல்லப்பட்டது இதுவே! இருக்கின்றவராய் இருப்பவர் தாமே! என்று இறைவன் உணர்த்தியதாக சொல்கின்றார்கள்.

நாம் கடவுளை நம்புகின்றோமோ இல்லையோ நம் அடிமன நிலையில் இறைவன் உறைந்துள்ளார். இதுவும் எனது இன்னொரு புரிதல்! மனதர்களுக்குள் இருக்கும் ஆன்மாக்களுக்கு கடவுள் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆன்மாக்கள் தானே இறைவன். எனவே தான் ஆன்மாக்காள் துன்புறும் நிலையில் கடவுளும் துன்புகின்றார். இன்பம் துண்ப உணர்வுகள் கடவுளுக்கு இல்லை என்பதை நீங்கள் ஆமோதிக்கின்றீர்களா? என்னைக்கேட்டால் இல்லை என்றே சொல்வேன்.

நமக்கு துன்பம் விளைவிப்பவை நமக்குள் நாமே இடம் கொடுத்துவிட்ட தீய எண்ணஙக்ள் நமக்கு துன்பம் விளைவிக்கின்றன. எண்ணங்கள் அழகாய் இருந்தால் வாழ்வும்அழகாக இருக்கும். பிறருக்கு நாம் செய்யும் நன்மைகளின் பிரதிபலன் மீண்டும் கிடைக்கும் போது அது இரட்டிப்பாக கிடைக்கும். அது தீமையாக இருக்கும் பட்சத்தில் பன்மடங்கு திரும்பி கிடைக்கும். ஆக நன்மையும் தீமையும் எப்படி வருகிறது என்ப தை விளக்கத்தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா? என்று ஒருவரியிலேயே சொல்லிவிடலாம். இதை எல்லாம் விட்டுவிட்டு துன்பங்கள் கடவுளால் வருகின்றது, அவர் தண்டிக்கின்றார் என்றி பிழையான கற்பிதங்களை கற்றுக்கொள்கின்றோம். துன்பத்தில் இருப்பவன் இறைவனை தேடுவதற்கு, அவனே அதற்கு பொறுப்புக்கூறும், சர்வதேச முறைப்பாட்டை ஆண்டவன் முன் வைக்கின்றோம்.

இதற்கு முக்கிய காரணம் பழங்காலந்தொட்டே இந்த மனித இனத்தை ஆக்கிரமித்த மூடக் கொள்கைகளும் பிரக்ஞை அற்ற செயல்களும் தான்.
இதற்கு எல்லா மதங்களும் பொறுப்பேற்க வேண்டும். இந்த மதங்கள் எல்லாம் இவ்வுலகத்தை கடவுள் என்ற ஒரு நபர் தான் ஏற்படுத்தினார் என்று கூறுகின்றன. துன்பத்தில்மிருக்கும் மனிதனை இலகுவாக தமது மதத்துக்குள் இழுத்துப்போட சில மதவாதிகள் முனைகின்றார்கள். வருந்தி சுமை சுமப்பவர்கள் வாருங்கள் என்னிடம் என ஆண்டவர் அழைத்தது உண்மையே, சுமையின் பழுவை எப்படி குறைக்கலாம், அல்லது அறவே நீக்கக்கூடிய வழிகளை நாமே கண்டுபிடித்து நீக்குவதற்கான வழிவகைகளை நம்மைக்கொண்டே கிரிகை செய்வார், ஏனெனில் நம் நம்பிக்கை இல்லாமல் எதுவுமே நடக்காது, இதுவும் எனது இன்னொரு புரிதல்! இறுதியில் செயலாற்றுவது மனிதனே, கடவுள் எங்கும் நிறைந்தவர் எல்லாம் தெரிந்தவர் என்று அவை கூறுகின்றன. இதனால் நாம் கடவுளை விட புத்திசாலி இல்லை என்று நம்பி நாம், ஏதோ வாழ்ந்து மடிகிறோம். இயேசு சும்மாவா சொன்னார், என்னை நம்புபவன் என்னைவிட பெரிய பெரிய காரியங்களை செய்வான் என்று.
தன்னுடைய பகுத்தறிவு, சுய சிந்தனை, தன் மீதும், தன் படைப்பின் ஆதாரம் மீதும், நம்பிக்கை எல்லாம் இழந்து போய் இயந்திரம் போல வாழ்கிறான் மனிதன். இதுதான் உலகத்தின் அத்தனை துன்பங்களுக்கும் காரணம். இந்த உலகத்தை எந்த ஒரு தனி நபரும் ஏதோ ஒரு காரணம் கருதி படைத்திருக்க முடியாது. இந்த மிகப்பெரிய பொறுப்பை இல்லாத தனிநபரிடம் ஒப்படைக்காதீர்கள்.
நாம் இந்த பூமியில் இருக்கிறோம். இதன் அழகிற்கும் ஆனந்தத்திற்கும் அழிவிற்கும் நாம் தான் காரணம். நாம் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
நாம் இங்குள்ள சந்தர்பங்களை மிக திறமையாக பயன்படுத்த வேண்டும். ஆகவே கடவுள் என்று பொய்யாக கூறித்திரியாமல், மொத்த மனித வர்க்கமும் கடவுள் என்று எண்ணிக்கொண்டு, கடவுள் என்ற உங்கள் கற்பனை வடிவத்தை அகற்றி விட்டு அங்கு மனிதனை அமர செய்யுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு இந்த உலகத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உலகத்து துன்பங்கள் மறையும்.
ஆனால், எல்லா மதங்களும் என்ன சொல்கின்றன? பொறுப்பை கடவுளிடம் விட்டுவிடுங்கள் என்று கூறுகின்றன. இது உங்களிடம் ஆழமான தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. உங்களை சோம்பேறி ஆக்குகிறது. நீங்கள் உங்கள் முழு சக்தியை நம்பிக்கை பயன்படுத்துவதில்லை. எது நடக்குமோ அது தான் நடக்கும் எல்லாம் அவன் செயல் எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று பேசி திரியாதீர்கள்.
உங்கள் தோல்விக்கு காரணம் உங்களின் சக்தியை, உங்கள் நம்பிக்கையை, மானுட அன்பின் சக்தியை நீங்கள் முழுமையாக உபயோகிக்கவில்லை என்பது தான். உங்கள் ஒவ்வொருவரிடமும் சக்தி, நம்பிக்கை இருக்கின்றது, அன்பு ஆழத்தில் இருக்கிறது. அதை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். இதுவே எனது இன்னொரு புரிதல்.
அதற்கு ஒரே வழி, நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் உங்கள் பழைய கடவுள்களை தைரியமாக தூக்கி எறிய வேண்டும். அவற்றை உங்கள் வாழ்வில் இருந்து துடைத்து எறிய வேண்டும். இதற்கு மிகுந்த தைரியமும் சுய சிந்தனையும் தேவை. பிறகு நீங்கள் ஒரு வெறுமையை உணருவீர்கள். ஒருவித பயம் உங்களிடம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நீங்கள் இதுவரை நம்பி வந்த அனைத்தும் பொய் கற்பனை. இந்த வெறுமை நிலை உங்களுடைய உண்மையான இருப்பிடம். இந்த உணர்வு ஏற்படுவது நன்மைக்கு தான்.
இதுவரை நம்பி வந்த கடவுள்கள் உங்களுக்கு பொய்யான ஆறுதலை ஏற்படுத்தி இருக்கலாம். பொய்யான நம்பிக்கைகளை ஊட்டி இருக்கலாம். எல்லாமே அந்த கற்பனை கடவுள்களை போல பொய்தான். இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய துன்பங்களுக்கு அடுத்தவர்கள் தான் காரணம் என்ற முட்டாள்தனமான மனப்பான்மையை முதலில் விட்டொழியுங்கள். உங்கள் துன்பங்களை உருவாக்கிக் கொள்வது நீங்களே. உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களுடையதே. அதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த உலகத்தில் வாழும் போது, உங்கள் அடிமனத்தில் ஆழபுதையுண்டு போயுள்ள அன்பின் ஊற்றை அனுபவியுங்கள், அதன் உந்தலில் வாழுங்கள், அந்த அன்பின் உந்தல்தான் ஆண்டவனின் அசைவாக நமக்குள் இருப்பதை உணர்ந்து கொள்வீர்கள். “நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’ சிவ வாக்கியர் பாடல்-520

நமக்குள்தான் நாதனாகிய இறைவன் இருக்கின்றான், நம்மை நாம் உய்த்தறிய துணிவதில்லை, நீங்கள் அதில் இருந்து தப்பி செல்லவே விரும்புகிறீர்கள். அதுதான் உங்கள் சகல துன்பத்திற்கும் காரணம். அந்த துன்பங்களை தீர்க்க முயலும் போது மேலும் பத்து துன்பங்களை உண்டாக்கிக் கொள்கிறீர்கள். துன்பம் துன்பத்தையே உற்பத்தி செய்கிறது. பிறகு இவ்வளவு துன்பங்களா என கதறுகிறீர்கள். ஆனால் அதை தவிர்க்க முடியும்.
நீங்கள் உங்களை மறக்க பொதுநல தொண்டில் ஈடுபடலாம் போதையில் மிதக் கலாம் பெண்களுடன் சுற்றலாம். அதனால் என்ன பிரயோஜனம்? அது உங்களது பிரச்சனைகளை ஒருபோதும் தீர்க்காது. இதனால் நீங்கள் உங்கள் தனிமையில் இருந்து தப்பி செல்லுகிறீர்கள். உங்களை மறக்கிறீர்கள். உங்கள் தியானத் தன்மையை இழக்கிறீர்கள். இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்குள் வாசம் செய்கின்றார். உங்களோடு இருக்கின்றார், உணர்ந்து கொள்ளுங்கள். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்


No comments:

Post a Comment