Wednesday, 28 April 2021

வாழ்வின் மையம்

 வாழ்வின் மையம் பேசாலைதாஸ்

வாழ்க்கை பரந்து விரிந்த தத்துவம். அது இந்த உலகத்தோடு மட்டும் நின்று விடப்போவதில்லை, இறப்பிற்குப்பின்னர் அது பிரபஞ்சத்தை சார்ந்திருக்கும்,  பிறப்புக்கும் முன்னரும் பிரபஞ்சத்தில் தான் இருந்தது. இது மனிதர்களுக்கு புரிவதில்லை, அதனால்தான் பிறப்புக்கு முன்னே இருந்தது உனக்கும் புரியாது, இறந்த பின்னாளே நடப்பது என்ன எனக்கும் தெரியாது என கவிஞன் கண்ண தாசன் பாடினான். வாழ்வே கடவுளின் இயக்கம், வாழ்வே கடவுளின் மையம் என்பது என் சிறுமதியின் புரிதல்!

 ஒருசமயம் பாக்தாத்தின் மன்னன் சுல்தான், ஒரு சிறந்த ஏற்பாடு செய்தான். அதாவது தன்னிடம் உள்ள கலைப்பொருள்களையும் நகைகள் மற்றும் விலை யுயர்ந்த உடைகள் போன்றவற்றை ஒரு கண்காட்சி போல நடத்தினான் . மக்கள் திரண்டு ரசித்தார்கள் .அப்பொழுது அந்த சுல்தான் திடீரென்று ஒரு வித்தியாசமான அறிவிப்பை செய்தான் . அதாவது யார் யார் தான் விரும்பிய பொருள்களைத் தொடுகிறார்களோ , அது அவர்களுக்குச் சொந்தமாகும் என்பதுதான் !

மக்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு தங்களுக்கு வேண்டிய பொருள்களைத் தொட்டு எடுத்துக்கொண்டார்கள் .அப்பொழுது அரச பீடத்துக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு அடிமைப்பெண் சிறிது சிந்தித்தவாறு நின்றி ருந்தாள். அப்பொழுது அந்த சுல்தான் தன் அரச பீடத்தில் வந்து உட்கார்ந்தான் . உடனே அந்த அடிமைப்பெண் அந்த சுல்தானைத் தொட்டுவிட்டாள் ! அந்தப் பெண்ணின் அறிவுக்கூர்மையைக் கண்டு வியந்த அந்த அரசன் , " நீ இந்த நாட்டுக்கு அரசனான என்னையே தொட்டுவிட்டாய் . இனிமேல் இந்த நாடே உனக்குச் சொந்தம் ! என்றான் . இந்தக் கதையில் நீங்கள் எதை புரிந்து கொண்டீர்கள்?

 வாழ்வு என்பது மிகப்பெரியது அதன் வெளிச்சுற்று மிக ஆடம்பரமானது .நீங்கள் இந்த வெளிச்சுற்றில் உள்ள ஒவ்வொரு ஆடம்பரப் பொருள்களையும் தொட்டு அடையப்போகிறீர்களா? அல்லது அந்த வாழ்வுக்கு ஆதாரமான அதன் மையத்தில் இயங்கும் கடவுளைத் தொட விரும்புகிறீர்களா ? என்னைப் பொறு த்தவரையில் , வாழ்வேதான் கடவுள் . 

ஆனால் அந்த வாழ்வில் இயேசு வர்ணித்த ஆடம்பர செல்வந்தனும் இருக்கின்றான் , ஏழை லாசரும் இருக்கின்றார், வாழ்விலே இராஜபோகம் துறந்த புத்தரும் இருக்கிறார். பெரும்பாலோர் வாழ்வு என்றால் வியாபாரம் , பணம் , அதிகாரம் , கௌரவம் , அரசியல் , குடும்பம் , பெண் இன்பம் என்று தான் நினைக்கிறார்கள். இவையெல்லாம் வாழ்வின் மிக மேலோட்டமான அம்சங்கள் என நான் நினைக்கின்றேன்.

 இவைகளெல்லாம் கடவுள் என்ற அரண்மனையின் வாசல்கள் . இவைகள் எல்லாம் சலிப்பை உண்டு பண்ணக்கூடியவை . சிற்றின்பத்தில் சேர்ந்தவை . மாறாகப் பேரின்பம் என்பது அந்த அரண்மனைக்குள் இருக்கிறது . அங்கு உண்மையான வாழ்வு இருக்கிறது .நீங்கள் வெறுமனே சாப்பிட்டுக் கொண்டும் , குடித்துக் கொண்டும் , திருமணம் செய்துகொண்டும் , பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும் , இருப்பது மிகவும் மேலோட்டமான வாழ்வு . 

இவர்கள் தங்கள் ஆன்மாவைப் பற்றி கவலைப்படுவது இல்லை . மாறாக இன்னொரு சாரார் , கடவுளைப் பற்றியும் , அடுத்த உலகத்தைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டு , சாப்பிடுவது , குடிப்பது மற்றும் சந்தோஷமாக இருப் பதில் அலட்சியம் காட்டுகின்றனர் .நீங்கள் எல்லா செயல்களிலும் உங்களுடைய பிரக்ஞைத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் . 

அப்படிச் செய்தால் , சாப்பிடுவது குடிப்பது பெண் இன்பம் அனுபவிப்பதுகூட தியானமாகிவிடும் . 

எதையும் தேர்ந்தெடுக்காதீர்கள் . 

ஒருசமயம் வாழ்வின் வெளிச் சுற்றில் இருக்கவும் . மறுசமயம் வாழ்வின் உள் மையத்தில் இருக்கவும் .

 உலகத்திலும்/கடவுளிடமும்/வாழ்விலும் ஒருங்கே இருக்க முயற்சி செய்யுங்கள் "

No comments:

Post a Comment