மனிதத்தின் வெளிப்பாடு......பேசாலைதாஸ்
ஒரு ஊரில் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு வந்து நிலைமையைக் கண்ட புத்தர் தன்னைக் காண வந்திருந்த அனைத்துத் தரப்பினரையும் பார்த்து.,
''இங்கு பட்டினி கிடக்கும் மக்களுக்கு உணவளிக்கும் பணியை யார் செய்யத் தயாராயிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.
ஊரின் பெரும் பணக்காரர்,
''எனக்கு சொந்தமான எல்லாப் பணத்தை செலவழித்தாலும் பத்தாதே,''என்று அங்கலாய்த்தார்.
படைத்தலைவர் ஒருவர்,
''ஏதாவது போர் என்றால் நாட்டு மக்களுக்காக என் ரத்தம் சிந்தத் தயாராயிருக்கிறேன். ஆனால் பட்டினி கிடப்போருக்கு உணவளிக்க தேவையான உணவு என் வீட்டில் இல்லையே,''என்றார்.
நிலச்சுவான்தார் எழுந்து,
''இந்தப் பஞ்சம் வந்தாலும் வந்தது,எனது வயல்களில் சுத்தமாக விளைச்சல் இல்லை.
இந்த ஆண்டு அரசுக்கு எவ்வாறு வரி செலுத்தப் போகிறேன் என்பதே எனது இப்போதைய கவலை. எனவே என்னால் ஒன்றும் செய்ய இயலாது. ''என்றார்.
அப்போது ஒரு பிச்சைக்காரி எழுந்து,புத்தரை வணங்கி,
''பட்டினி கிடப்பவர்களுக்கு நான் உணவளிக்கிறேன், ''என்றாள்.அனைவருக்கும் ஆச்சரியம்.,
.''அது எப்படி உன்னால் முடியும்,'' என்று அனைவரும் கேட்டார்கள்.
அவள் பணிவுடன் சொன்னாள்,
''ஐயா,நான் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வருகிறேன். அப்போது இங்கு,தன்னால் முடியாது என்று சொன்னவர்கள், தங்களால் இயன்றதை பிச்சையாகக் கொடுத்தால் அதையெல்லாம் ஒன்று சேர்த்து நான் பசியால் வாடுபவர்களின் துயர் தீர்ப்பேன்,''என்றாள்.
அவளுடைய தன்னம்பிக்கை கண்டு புத்தர் அவளுக்கு ஆசி அளித்தார்.
மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சிறிய அல்லது பெரிய உதவிகள் மற்றவர்களை மகிழ்வித்து நீங்களும்மகிழ்வுற்று இன்பமாக வாழலாம்..
எதுவுமே முடியா விட்டால், எதிரில் இருப்பவர்களை கடுஞ்சொற்களால் காயப்படுத்தாமல் இருப்பதே
மனிதத்தின் வெளிப்பாடு....
.jpg)
No comments:
Post a Comment