புதிய ஒளி பேசாலைதாஸ்
எதைப் பற்றியும் எனக்கு இப்போதெல்லாம் எந்த ஆவலும் இல்லை. இது ஏன்? பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, இதே போல, ஓர் ஆத்ம ஞானப் பள்ளி இருந்தது. அது மாபெரும் சூபி ஞானி மவ்லானா ஜலாலுதீன் ரூமி என்பவருடையது. துருக்கி மொழியில், 'மவ்லானா' என்றால், 'அன்புக் குரு' என்று அர்த்தம். அந்தச் சொல் வேறு யாருக்குமே அடைமொழியாகப் பயன்படுத்தப் படவில்லை.
அந்தக் குருகுலத்திற்கு முன்னால், 'இந்தப் பள்ளி ஆவல் கொள்கிறவர்க ளுக்கு ஆனதல்ல', என்று எழுதப்பட்டிருந்ததுஆவலுக்கு எந்த ஆன்மிக அர்த்தமும் இல்லை.
ஆவல் அல்லது ஆச்சரியம் மனதின் நமைச்சல். நமைச்சல் இருந்தாலும் அது இருக்கும். இல்லாவிட்டாலும் அது இருக்கும்.
ஆவலுக்குள் உணர்ச்சி எதுவும் இல்லை. அது மேலோட்டமானது. போகிற போக்கில் ஒரு விசாரிப்பு, ஒரு வினா எழலாம். அவ்வளவுதான். அது உங்கள் தாகம் அன்று; தவிப்பு அன்று. அந்த ஆவலை நிறைவேற்ற உங்கள் வாழ்வையே தியாகம் செய்ய மாட்டீர்கள். ஓர் ஆராய்ச்சி கூடச் செய்ய முயல மாட்டீர்கள்.
ஆவல் மலிவானது, யாராவது பதில் சொன்னால் சரி. சொல்லாவிட்டாலும் சரிதான். ஆழ்ந்த கவனம் அதனால் உங்களுக்கு ஏற்பட்டு விடுவதில்லை. .... அது இதயத்திலிருந்து எழுவதல்ல. இருத்தலைப் பற்றிய உணர்வு மயமான விசாரணை ஏற்படுவதற்கு முன்பே ஆவல் மறைந்துவிடும்.
அதனால், அது ஒரு மோசமான அடையாளமல்ல. நீ சரியான பாதையில் தான் போகிறாய் என்பதைச் சுட்டிக் காட்டும் முக்கியமான அடையாளம். சரியான பாதை ஆவல் கொள்கிறவர்களுக்குச் சொந்தமானதல்ல. ஈடுபாட்டுடன், உடன்பட்டு, உண்மையை உணர உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்க்கே அந்தப் பாதை உரியது. ஆவல் மறைந்தவுடனே, நீ வெறும் மாணவனாக அல்லாமல், சீடனாக விடுகிறாய்.
ஒரு மாணவனுக்கும், சீடனுக்குமிடையிலுள்ள வேறுபாடு இதுதான். மாணவனுக்கு ஆவல் மட்டுமே உண்டு. சும்மா, எல்லாத் தகவல்களையும் சேகரிப்பது மட்டுமே. அது கட்டாயத் தேடல் அன்று. தன் அறியாமையை மறைக்க அறிவைத் தேடுவது மட்டுமே.
ஆனால், அறியாமை என்னவோ அங்கேயேதான் இருக்கிறது. அதை மூட மூட ஆபத்தாகிறது. காரணம், அது உங்களுக்கு மறந்து போய் விடுகிறது. தனது அறியாமையை மறந்து போகிறவன் தொலைந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.
நமது அறியாமையை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பது, இரவு இன்னும் முடியவில்லை, விடியல் இனிமேல்தான் வரப் போகிறது என்று அர்த்தம். இருள் கரைவதற்கு முன்பு நீங்கள் நீண்ட தூரம் போகிற வேண்டும். அப்போதுதான், விடியலின் முதல் வெளிச்சத்தைப் பார்க்க முடியும். அப்புறம்தான் சகல கோலாகலங்களோடு கதிரவன் கீழ்வானில் உதயமாவான், அனைத்து அழகுகளோடும்; ஆசிர்வதிப்புகளோடும்.
ஆவல் கொள்கிறவனிடம் எந்த ஆழமும் இல்லை. அறிய வேண்டும் என்ற ஆர்வத் தவிப்பு, உணர்வு மயமாக எழும்போது, அது, வாழ்வா சாவா என்பது போலத்தான். அதை அறியாவிட்டால் வாழ்க்கை பசுமையற்ற பாலைவனமாகி விடுமே என்று தோன்றும். அறிந்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்த உணர்வு எழும். உணராவிட்டால் வாழ்வு பயனற்றது என்று தோன்றும். அறிந்தால்தான் வாழ்வுக்கு அர்த்தமிருக்கும், முக்கியத்துவம் இருக்குமென்று தோன்றும்.
அந்தத் தவிப்பில் ஆழத்தில் குதித்து விடுவீர்கள். அப்படிப்பட்ட ஒரு கட்டம் வரும். அது அறிதல் மட்டுமல்ல. அதுவாக இருத்தலுக்கான தவிப்பு.
அறிவு எப்போதும் இருக்கவே செய்கிறது. உங்களுக்கும் அதற்குமான இடைவெளி அதிகம். அவ்வளவுதான். அதனுடன் நீங்கள் சேர்ந்து இருக்கவில்லை. அறிபொருளிலிருந்து அறிபவன் பிரிந்திருக்கிறான். இதுதான் அறிவின் நிலைபாடு. தண்ணீரும் இருக்கிறது. நீங்களும் இருக்கிறீர்கள். தொடர்பு அம்சம்தான் இல்லை. அதனால், தாகம் அதிகமாகி விடுகிறது.
ஒரு சீடனின் வாழ்வில், அறியும் தாகத்தைத் கைவிட்டு, இருத்தலுக்கான தாகம் ஏற்படும் மாபெரும் கணம் ஏற்படும்.
ஆவலுக்கு ஆவல் தகவலில் மட்டுமே.
சீடனுக்கோ ஞானத்தில்தான் ஆசை.
பக்தனுக்கு மாற்றத்தில்தான் விருப்பம். அவனுக்கு உண்மை உணர்வதில் ஈடுபாடில்லை. அதில் நிறைவு ஏற்படுவதில்லை. அவனே உண்மையாக ஆனால்தான் உண்டு.
சொல் வறுமையால்தான், 'ஆனால் ' என்று சொல்கிறேன். யாரும் உண்மையாக ஆவதில்லை. ஏனென்றால், எல்லாருமே உண்மையாகத்தான் இருக்கிறார்கள்.
உண்மை என்பது உங்களது இருப்பு. 'ஆகும் ' காரியமல்ல, அது. ஆகக்கூடிய காரியம் அல்ல, அது. வழிமுறையுமல்ல. பயணம் போகிற வேண்டிய பாதையும் அல்ல. நீங்கள் சென்றடைய வேண்டிய தொலை தூரத்துக் குறிக்கோளும் அல்ல.
உண்மை உங்களது உள்ளிருப்பு. நீங்கள் உணர்கிறீர்களோ இல்லையோ, எல்லையற்ற காலமாய் அது எப்போதும் இருப்பது. நீங்கள் அடையாளம் கண்டு கொள்கிறீர்களோ இல்லையோ, அது அங்கேயேதான் இருக்கிறது.
ஒரு பக்தன் உண்மையாக ஆவதில்லை. தானே உண்மை என்பதை அவன் கண்டு கொள்கிறான். மனிதப் பிரக்ஞையால் கண்டு பிடிக்கப்படும் மாபெரும் கண்டுபிடிப்பு அதுதான்.
அதனால்தான், எந்த ஆவலும் இல்லையென்று நீ சொன்னதை நல்லது என்கிறேன். அது ஒரு பக்குவம். மாணவ நிலையிலிருந்து சீட நிலைக்கு மாறியதன் அடையாளம். நீ சீட நிலையிலிருந்தும் மாறிப் பக்தன் நிலைக்கு நகர்ந்து விட்டாய்.
உன்னுடைய தாகம், உன்னுடைய விசாரணை, இனி வரண்ட தேடல் அல்ல. அது உன்னுடைய காதலாகிவிட்டது; உன் இதயத் துடிப்பாகி விட்டது. எல்லா ஆவல்களும் அதனால் இயல்பாகவே காணாமல் போய் விட்டன.
ஒரு நாள் -- உண்மையை அறிவதும், தெய்வீகத்தை அறிவதும், அழகை அறிவதுமான எல்லாம் போய்விடும். அறிதலில் ஆர்வம் போய்விடும். தண்ணீரை அறிவதால் என்ன பயன்? அதை அறிவியல் பூர்வமாக அறிவதும்கூட -- நீரகம், தீயகம் கலந்ததென்று -- உங்கள் தாகத்தைத் தீர்க்காது.
அந்தப் பாதையின் முக்கியமான கட்டம், உங்களை அறிவதுதான். நீங்கள் அதுவாகத்தான் ஏற்கனவே இருந்து வருகிறீர்கள். அது தெரிகிறதோ இல்லையோ, நீங்கள் ஆதாரபூர்வமான அதுதான். உங்கள் அடிப்படை, சாரம், இருப்பு அதுவேதான். அதற்குள் இருப்பவையே ....
சத்தியம், சிவம், சுந்தரம்.
உங்கள் உண்மையை உணரும் போதுதான் தெய்வீகமும், எல்லையற்ற அழகும் எழும். உங்களது இருப்பு, தெய்விகத்தின் ஒரு பகுதி. அப்போது உங்களது ஒவ்வொரு அசைவும் ஒரு நடனமாகும். உங்களது ஒவ்வொரு மெளனமும் ஒரு பாடலாகும். உங்கள் சொற்கள் தீப்பற்றி எரியும். அது புதிய நெருப்பு. அது புதிய ஒளி -- உங்களுடைய வாழ்வு முழுதுமே காந்த சக்தியின் ஆற்றலாகி விடும்.
No comments:
Post a Comment