Friday, 3 January 2025

ஒரு கை ஓசை

ஒரு கை ஓசை  பேசாலைதாஸ்

தியானம் கற்றுக் கொள்வதற்காக ஒரு இளந்துறவி ஜென்மகானிடம் வந்தார்.

மகான் சொன்னார் :

முதலில் ஒரு கை ஓசையின் மேல் தியானம் செய்.

இளந் துறவிக்கு குழப்பமாக போய்விட்டது. ஒரு கையில் எப்படி ஓசை வரும். இரு கைகள் சேர்ந்து தட்டினால் தானே ஓசை வரும்.

குழப்பத்தோடு மரத்தடியில் அமர்ந்து யோசிக்கலானார். ஒன்றும் புலப்படவில்லை -

திடீரென்று மூங்கில் காட்டிலிருந்து ஒரு பறவையின் கூக்குரல் கேட்டது. இதுவாக இருக்குமோ என்று மகானிடம் போய் சொன்னார்.

மகான் கோபத்தோடு அவரை முகத்தில் அடித்து,, முட்டாள் தனமாக பேசாதே,, போய் தியானம் செய் என்றார்.

மீண்டும் இளந்துறவி யோசிக்கலானார்.

ஒவ்வொரு நாள் ஒரு பதிலை கொண்டு போனார்.

மரங்களிடையே செல்லும் காற்றின் ஒலி,,

வாய்க்காலில் ஓடும் தண்ணீரின் ஒலி,,

வானில் தோன்றும் இடி முழக்கம்,,

இப்படி சொல்ல சொல்ல மகான் அவரை அடித்து போகச் சொன்னார்.

ஒரு கட்டத்தில் அவர் சொல்வதையே மகான் கேட்கவில்லை.

இளந் துறவிக்கு ஒரே வருத்தம். சொல்வதை கூட கேட்காமலேயே அடித்து துரத்துகிறாரே என்று மற்ற துறவிகளிடம் கூறி வருத்தப்பட்டார்.

திடீரென்று இளந் துறவி மகானை பார்க்க செல்லவில்லை. சில நாட்கள் கழிந்தன.

மகான் அவரைத் தேடி இளந்துறவி வழக்கமாக தியானம் செய்யும் மரத்தடிக்கு வந்தார்.

எல்லாவற்றையும் மறந்து இளந் துறவி மெளனத்தில் மூழ்கியிருந்தார்.

அவரை உலுக்கி சுய நினைவு வரச் செய்து மகான் கேட்டார்.

கடைசியாக ஒரு கை ஓசையை கேட்டு விட்டாயா? இந்த மெளனம் தான் ஒரு கை ஓசை.ஏன் என்னிடம் வந்து சொல்லவில்லை?

இளந் துறவி சொன்னார் :

இந்த மெளனத்தில் என்னை நான் மறந்து விட்டேன்.so Blissful,,so Sweet,,

இப்பொழுதுதான் எனக்கு புரிகிறது. ஏன் என் எந்த பதிலையும் கேட்காமல் என்னை அடித்து துரத்தினீர்கள் என்று.

உங்கள் அன்பையும் அக்கறையையும் சாதாரணமானவர்கள் புரிந்து கொள்ள முடியாது என்று கூறி வணங்கினார்.

No comments:

Post a Comment